Join/Follow with Our Social Media Links

சபாபதி திரை விமர்சனம்

சபாபதி திரை விமர்சனம்


R K எண்டர்டெயின்மெண்ட் சார்பில் C ரமேஷ் குமார் தயாரித்துள்ள படம் சபாபதி. அறிமுக இயக்குனர் R ஸ்ரீநிவாச ராவ் எழுதி இயக்கியுள்ளார். சாம் C S இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தை தொகுத்துள்ளார்.

சபாபதி படத்தில் நடிகர் சந்தானம் சபாபதியாக நடித்துள்ளார். நடிகை ப்ரீதி வர்மா சபாபதி காதலி சாவித்திரி என்கிற சாவியாக நடித்துள்ளார். M S பாஸ்கர் சபாபதியின் தந்தை கணபதி ஆசிரியராக நடித்துள்ளார். உமா பத்மனாபன் லீலாவதி கதாப்பாத்திரத்தில் சபாபதி தாயாக நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே லக்கி ராஜா என்னும் அரசியல்வாதியாக நடித்துள்ளார், வம்சி கிருஷ்ணா லக்கி ராஜா சகோதரன் செல்வம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். குக்கு வித் கோமாளி புகழ் சபாபதியின் நண்பன் ரமணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுவாமிநாதன் கணபதியின் நண்பர் ராஜாமணியாக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஒவ்வொரு தந்தையின் கனவும் தன் ஓய்வு காலத்திற்குள் தன் மகன் வாழ்கையில் நல்ல வேலையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட தந்தையின் எதிர்பார்ப்பு. அதே போல் உடலில் ஏதேனும் குறையிருந்தால் அதற்காக வருத்தப்படாமல் நேர்மையாக இருந்தால் எப்படியும் வாழ்கையில் முன்னேறலாம் என்பதை சொல்லும் படம் சபாபதி.

கதை.:

விதி, அதன் விளையாட்டிலிருந்து யாருமே தப்ப முடியாது. அப்படிப்பட்ட விதி சபாபதியின் வாழ்கையில் விளையாடப்போகின்றது என்ற முன்னோட்டத்துடன் கதை தொடங்குகின்றது.

ஸ்ரீரங்கத்தில் சிறுவயதில் சபாபதி தன் தந்தை கணபதி மற்றும் தாய் லீலாவதியுடன் கோவிலுக்கு வருகின்றார். தாம்பூலத்தட்டில் கோயிலுக்கு செலுத்த வேண்டிய காணிக்கை பணத்தை வைத்து சபாபதி தாய் லீலாவதி சபாபதியை கோவிலை சுற்றி வரச்சொல்கின்றார். அப்போது சபாபதி சாவித்திரியை பார்க்கின்றான். அவளை பார்த்துக்கொண்டே கோவிலை சுற்றும் போது தாம்பூல தட்டிலிருக்கும் பணத்தை திருடன் ஒருவன் எடுத்துவிடுகின்றான். சபாபதியின் தந்தை சபாபதியை திட்டுகின்றார்.

சாவித்திரி சபாபதி எதிர்வீட்டில் குடியிருப்பவர். சபாபதியின் திக்கு வாயை வைத்து பள்ளிக்கூடத்தில் அவனை கிண்டல் செய்பவர்களை சாவித்திரி திட்டுகின்றாள்.. சிறுவயதிலிருந்தே சபாபதிக்கு ஆறுதலாக இருப்பவர் சாவித்திரி.

இப்போது சபாபதி வளர்ந்து பெரியவனாகிறான். இன்னும் ஐந்து நாட்களில் விதி அவன் வாழ்கையில் விளையாடப்போவதாக சொல்கின்றது. முதல் நாள் ரமணி சபாபதியின் தோழன் ஆற்றங்கரையில் காலையிலேயே ஒருவன் குடிப்பதை பார்க்கின்றான். அவனுக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைத்தது என்று கேட்கின்றான். அரசியல்வாதி லக்கி ராஜா தன் தொண்டர்களுக்கு சரக்கு கொடுத்துக்கொண்டிருப்பதாக சொல்கின்றான். அதே நேரம் இரண்டு பேர் சென்றால் மூன்று குவார்ட்டர் சரக்கு கிடைக்கும் என்று சொல்கின்றான். ரமணி தன் நண்பன் சபாபதியை கூட்டிக்கொண்டு லக்கி ராஜா கூட்டத்துக்கு சென்று குவார்ட்டரை வாங்கி வருகின்றான். அப்போது சபாபதி ரமணியிடம் தான் சாவித்திரியை காதலிப்பதாக சொல்கின்றான்.

கணபதி ஆசிரியர் ஓய்வு பெருவதை முன்னிட்டு பிரிவு உபச்சார விழா நடக்கின்றது. வாழ்கையில் இனி நிம்மதியாக இருக்கலாம் என்ற கனவுடன் வெளியில் வருகின்றார். கணபதியை கூட்டிக்கொண்டு அவரது நண்பன் ராஜாமணி வருகின்றான். ராஜாமணி தான் ஓய்வு பெற்ற  பின் தன் குடும்பத்தில் தனக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அதனால் உன் குடும்பத்தை உன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள் என்று அறிவுரை சொல்கின்றான். அப்போது எதிர்வீட்டிலிருக்கும் சாவித்திரியின் தந்தையும் அம்மாவும் சபாபதி வீட்டுக்கு வருகின்றனர். தாங்கள் வேறு ஊருக்கு மாறப்போவதாக சொல்கின்றனர், அதனால் நாளை தங்கள் வீட்டிற்கு சாப்பிடவருமாறு அழைக்கின்றனர். அப்போது அங்கே வரும் கணபதி தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள தன் கெத்தை காட்டுகின்றார். அனைவரையும் அவமானப்படுத்தி வெளியில் அனுப்புகின்றார். சாவித்திரியின் தாய்க்கு இதனால் சபாபதி குடும்பத்தின் மீது வெறுப்பு வருகின்றது. சபாபதியை வேலைக்கு அனுப்புவது மட்டுமே இனி தன் வேலை என்று கணபதி சொல்கின்றார்.

இரண்டாவது நாள் செய்தித்தாள்களில் வரும் வேலைவாய்ப்பு செய்தி அனைத்தையும் தொகுத்து போர்டில் வரிசைப்படுத்தி எழுதி வைக்கின்றார். நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு தயங்கும் சபாபதியிடம் அவன் தங்கை வேலை கிடைத்தால் தான் சாவித்திரி கிடைப்பாள். கல்யாணம் செய்து கொள்ளமுடியும் என்று சொல்கிறாள். அதே நேரம் தன்னிடம் இருக்கும் லாப்டாப்பை சாவித்திரியிடம் கொடுக்க சொல்கிறாள். சாவித்திரியை பார்க்கும் சபாபதி அவளிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும் நாளைக்கு ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்குமாறு சொல்கிறான்.

மூன்றாவது நாள் இண்டர்வியூக்கு செல்லும் சபாபதியை அவன் திக்குவாய் என்று சொல்லி அவமானப்படுத்துகின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் சாவித்திரியிடம் தன் காதலை சொல்ல முயலும் போது அங்கே வரும் லக்கி ராஜா தம்பி செல்வம் சாவித்திரியிடம் தவறாக பேசுகின்றான். அப்போது சபாபதி அவளை ரயிலில் அனுப்பி வைக்கின்றான், இருவருக்கும் இடையே தகராறு வருகிறது. அப்போது லக்கி ராஜாவிடமிருந்து செல்வத்திற்கு போன் வருகின்றது. தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்ய ரூபாய் 120 கோடி பணம் வந்துள்ளது. 6 பெட்டிகளில் பட்டுவாடாவிற்கு தயாராக உள்ளது என்று சொல்லி அனுப்பி வைக்கின்றான். வீட்டிற்கு வந்த சபாபதியிடம் வேலைவிஷயம் என்ன ஆச்சு என்று கேட்கின்றார் கணபதி. சபாபதி எதுவும் சொல்லாமல் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொள்கின்றான்.

நான்காவது நாள் சாவித்திரி வீட்டில் விருந்தினர்கள் அமர்ந்திருக்கின்றனர். சாவித்திரியின் சகோதரி சகோதரியின் கணவர் (மதுரை முத்து) பேசிக்கொண்டிருக்கின்றனர். சாவித்திரிக்கு மாப்பிள்ளை பார்க்குமாறு மதுரை முத்துவிடம் சாவித்திரி தாய் சொல்கின்றாள். அப்போது மதுரை முத்துவிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்கின்றாள் சாவித்திரி. இண்டர்வியூவிற்க்கு புறப்படும் சபாபதியை வீட்டிற்கு கூப்பிடுகின்றாள். அவனை பார்த்த சாவித்திரியின் தாய் அவமானப்படுத்துகின்றாள். கால் செண்டர் வேலைக்கு செல்லும் சபாபதி அவன் குரலால் வேலையில்லையென்று சொல்கின்றனர். இதனால் அவமானப்பட்டு ரோட்டில் நடந்து வரும் சபாபதியை நண்பன் ரமணியும் அவனது நண்பனும் சந்திக்கின்றனர். சபாபதி குடிக்கமாட்டான். இருந்தாலும் தங்களுக்கு கம்பெனி கொடுக்க கூப்பிடுகின்றனர். அப்போது அவன் குரலை ரமணியும் கிண்டல் செய்கின்றான். கோபத்தில் அவனை அடிக்கின்றான். ஏதோ போதையில் தப்பாக பேசிவிட்டதாக சொல்கிறான், குடித்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. அப்படியென்று சொல்லி குடிக்கின்றான். குடித்துவிட்டு திக்காமல் பேசுகின்றான். அதை பார்த்த ரமணி குடி தங்களுக்குத்தான் போதை உனக்கு மருந்து என்று சொல்லி முழு சரக்கு பாட்டிலையும் கொடுக்கின்றான். போதையில் வீட்டிற்கு வரும் சபாபதி தன்னை அவமானப்படுத்திய சாவித்திரி அம்மாவிடம் தகராறு செய்கின்றான் எட்டி உதைக்கின்றான். வீட்டிற்கு செல்லும் சபாபதி தந்தையிடம் போதையில் அடாவடி செய்கின்றான். தந்தையின் தலையிலேயே வாந்தி எடுக்கின்றான். இதை ஊரே வேடிக்கை பார்க்கின்றது. அவமானத்தின் உச்சத்திலிருக்கின்றார் கணபதி. இந்த அவமானத்தில் தூக்கில் தொங்க பார்க்கின்றார் கணபதி. சாவித்திரியின் காதல் சாவித்திரி தாய்க்கு தெரிகின்றது. மகளை கண்டிக்கின்றாள். வீட்டில் போதையிலிருக்கும் சபாபதி வீட்டை விட்டு வெளியே வருகின்றான். அங்கே சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கின்றான்.

ஐந்தாவது நாள் விதி நுழையும் நாள். லக்கிராஜா தம்பி ரூபாய் 120 கோடி பணத்துடன் காரில் சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஏற்படும் விபத்தில் ரூபாய் 20 கோடி மற்றும் பணப்பட்டுவாடா குறிப்புகள் இருக்கும் பெட்டி மட்டும் பறந்து வந்து சபாபதி தலையில் விழுகின்றது. தன் தந்தைதான் குடித்துவிட்டு வந்தகாரணத்தால் வீட்டைவிட்டு வெளியே போகச்சொல்லி பெட்டியை தூக்கி போட்டதாக நினைக்கின்றான். போதையில் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் தன் அறைக்கு செல்கின்றான் சபாபதி. விதியின் விளையாட்டு தொடங்குகின்றது.

காலையில் போதை தெளிந்து சபாபதி எழுந்து பார்க்கும் போது பெட்டி நிறைய பணமும் ஒரு பென் டிரைவும் இருப்பதை பார்க்கின்றான். அதிர்ந்து போகின்றான், அந்த பெட்டி லக்கி ராஜாவின் சகோதரன் தம்பியின் வண்டியிலிருந்து விழுந்ததை தெரிந்து அதை திருப்பி கொடுக்க நினைக்கின்றான். லக்கி ராஜா சபாபதியை கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கு வரச்சொல்கின்றான். பெட்டியை வாங்கிக்கொண்டு சபாபதியை கொல்ல முயலும் போது ஏற்படும் விபத்தில் தலையில் அடிபட்டு மயக்கமாகிறான் லக்கி ராஜா. லக்கி ராஜாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பெட்டியை திரும்ப எடுத்துக்கொண்டு செல்கின்றான். பணப்பெட்டி வந்ததிலிருந்து பிரம்மை பிடித்தவன் போல் இருக்கின்றான் சபாபதி. அவனைப்பற்றி தெரிந்துகொள்ள ஜோசியரை பார்க்கின்றனர் கணபதியும் லீலாவும். ஜோசியர் சபாபதிக்கு நேரம் சரியில்லை சட்டையை கிழித்துக்கொண்டு திரிவான் என்று சொல்கின்றார். அதற்கேற்ப சபாபதியின் நடவடிக்கைகளும் இருக்கின்றது. அப்போது தொலைகாட்சியில் தொலைந்த பணத்தையும் பெட்டியை பற்றியும் சொல்கின்றனர். அது தேர்தலுக்காக பணப்பட்டுவாட செய்ய கொண்டு செல்லப்பட்ட பணம் என்று சொல்கின்றனர். அதிலிருந்து யாரவது செலவு செய்தால் மாட்டிக்கொள்வார்கள் என்றும் சொல்கின்றனர்.

பெட்டியிலிருந்து பணத்தை வேறோரு பெட்டிக்கு மாற்றி அந்த பெட்டியை போலிஸ் ஸ்டேஷன் முன் வைக்கின்றான். ஆனால் அந்த பெட்டியில் கணபதி வீட்டு முகவரி இருக்கின்றது. தன் மகன் பிரம்மை பிடித்தவன் போல் இருக்கின்றான் அதனால் இந்த பெட்டியை இங்கே வைத்துள்ளதாக விசாரனையின் போது கணபதி சொல்கின்றார். பெட்டியை கணபதியிடமே திருப்பி கொடுக்கின்றனர். மீண்டும் பணத்தை பழைய பெட்டிக்கே மாற்றுகின்றான் சபாபதி. அப்போது தேர்தல் கமிஷன் அலுவலர்கள் அந்த பெட்டி சபாபதி வீட்டிலிருப்பதாக அறிந்து அங்கே வருகின்றனர். அதே வேலை மருத்துவமனையிலிருந்து குணமான லக்கி ராஜாவும் சபாபதியை தேடி வருகின்றனர். லக்கி ராஜா வரும்முன் தேர்தல் அதிகாரிகள் சபாபதி வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் அங்கே தேடிவிட்டு பெட்டி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு செல்கின்றனர். சபாபதியும் அதிர்ச்சியடைகின்றான். அவன் அறைக்கு சென்று தேடுகின்றான் பெட்டி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகின்றான்.

அதே நேரம் கணபதி சபாபதியிடம் இன்னைக்கு நீ இண்டர்வியூக்கு செல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கிவிடுவேன் என்று சொல்கின்றார். பெட்டி தொலைந்ததை மறந்து இண்டர்வியூக்கு கிளம்புகிறான் சபாபதி. இதற்கிடையே லக்கி ராஜா சபாபதியிடமிருந்து பெட்டியை கைப்பற்றி அவனை கொல்லுமாறு செல்வத்திடம் சொல்கின்றான். இண்டர்வியூக்கு செல்லும் சபாபதியை தடுத்து நிறுத்துகின்றான். அப்போது கணபதியிடமிருந்து சபாபதிக்கு போன் வருகின்றது. இண்டர்வியூவை தான் அட்டெண்ட் செய்யாவிட்டால் தன் தந்தை இறந்துவிடுவார் என்று செல்வத்திடம் சொல்கின்றான். செல்வம் சபாபதியின் தந்தை இறந்தால் இறக்கட்டும் என்று சொல்ல சபாபதி கோபம் கொண்டு செல்வத்துடன் சண்டை போட்டு அவனை சாய்க்கின்றான்.

இண்டர்வியூக்கு செல்லுமிடத்தில் அந்த உரிமையாளரும் ஊனமுற்றவராக இருக்கின்றார். சபாபதியின் நல்ல குணத்தை தெரிந்த உரிமையாளர் சபாபதிக்கு வேலை கொடுக்கின்றார்.

ரயிலில் வீட்டுக்கு திரும்பும் போது ரயில்வே ஸ்டேஷனில் சிகப்பு பெட்டியை ஒரு திருடனிடம் பார்க்கின்றான். அவனை துரத்தி பிடிக்க முயலும் போது திருடன் தப்பி செல்கின்றான். அவனிடமிருந்து பெட்டி ஓரு வண்டியில் விழுகின்றது.

லக்கி ராஜா வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்துவிட்டு ஒன்றும் கிடைக்கவில்லையென்று திரும்ப முயலும் போது பெட்டி விழுந்த லக்கி ராஜா பிரச்சார வண்டி உள்ளே நுழைகின்றது. தேர்தல் அதிகாரிகள் அந்த பெட்டியை கைப்பற்றுகின்றனர்.

வீட்டிற்கு செல்லும் சபாபதி வேலை கிடைத்ததை வீட்டில் சொல்லி சந்தோஷப்படுகிறான். அங்கே வரும் சாவித்திரி சபாபதியிடம் தன் காதலை சொல்லி கட்டிப்பிடிக்கின்றாள். சபாபதியின் தாய் இருவரையும் பிரிக்க முயல கணபதி காதலுக்கு சம்மதிக்கின்றார்.

விதி தன் சதியை முடித்துவிட்டதாக சொல்கின்றது.

பாராட்டுக்குறியவை.:

கதையில் ஒன்றும் புதுமையில்லை. ஆனால் காமெடிக்கு பஞ்சமில்லாமல் படத்தை கலகலப்பாக எடுத்துள்ளார் இயக்குனர்.

சபாபதி கதாப்பாத்திரத்தில் சந்தானம் அருமையாக நடித்துள்ளார்.

கணபதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள M S பாஸ்கரின் நடிப்பு அருமை.

ராஜாமணியாக சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனைவியிடம் அடிவாங்கும், மனைவியிடம் பம்மும் கதாப்பாத்திரத்தில் சுவாமிநாதன் சிரிக்கவைக்கின்றார்.

கதை லாஜிக்கெல்லாம் மறந்துவிட்டு நகைச்சுவையை முதன்மைபடுத்தி மனநிறைவுடன் கொடுத்துள்ளனர்.

நெருடலானவை.:

விதி என்ற அடிப்படையிலான பில்டப் தேவையில்லாத ஒன்றாகவே உள்ளது. அந்த அடிப்படை இல்லாமலே அருமையாக இந்த படத்தை கொடுத்திருக்கலாம். விதி ஓவர் பில்டப்.

எந்த கதாப்பாத்திரத்திலும் லாவகமாக நடிப்பவர் சந்தானம். ஆனால் திக்குவாய் கதாப்பாத்திரத்தில் திக்கு வாய் பேச்சு பேசி நடிப்பதில் செயற்கைத்தனத்தை உணர முடிகின்றது.

எரிந்த ஜீப்பிலிருந்து ஒரு பெட்டி பறந்து சென்றது. அந்த ஒரு பெட்டி பற்றி லக்கி ராஜாவுக்கு மட்டுமில்லாமல் மீடியாக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் எப்படி தெரிந்தது என்பது லாஜிக்கில்லா ஒன்று.

சந்தானமும், M S பாஸ்கருமே முழுப்படத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். மற்றவர்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கின்றது.

நாயகி சாவித்திரியாக நடித்திருக்கும் ப்ரீதி வர்மா அழகாக வந்து செல்கின்றார், இன்னும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

தொகுப்பு.:

விதி விளையாட்டை மறந்து படத்தை பார்த்தால் சபாபதி படத்திற்கு சபாஷ் போடலாம்.

Movie Gallery

  • review

    Saipriya Deva

  • review

    Kalyani Priyadarshan

  • review

    Rithika Singh

  • review

    Kiran Rathod

  • review

    Preity Zinta

  • review

    Priyamani

  • review

    Kalyani Priyadarshan

  • review

    Madonna Sebastian

  • review

    Athmiya Rajan

  • review

    Anupama Parameswaran

  • review

    Amritha Aiyer

  • review

    Nivetha Thomas

  • review

    Catherine Tresa

  • review

    Shraddha Srinath

  • review

    Mirnalini Ravi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.