Zee5 ஒரிஜினல் பிலிம்ஸிற்காக மங்கிமேன் கம்பெனி (Monkeyman Company) சார்பில் வைபவ் தயாரித்துள்ள படம் “மலேஷியா டு அம்னீஷியா”. இதன் கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தை “மொழி” மற்றும் “அபியும் நானும்” புகழ் இயக்குனர் ராதா மோகன் செய்துள்ளார். “என்ன கொடுமை சார் இது” புகழ் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். K.L.பிரவீன் படத்தை தொகுத்துள்ளார்.
இந்த திரைப்படம் நேரடியாக Zee5 ஒடிடி தளத்தில் இன்று (28.05.2021) முதல் ஒளிபரப்பாகின்றது.
வைபவ், வாணி போஜன், ரியா சுமன், M.S.பாஸ்கர், கருணாகரன், பேபி வேதிகா, சச்சு, மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு:
மனைவி வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு தெரியாமல் வெளியில் தொடர்பு வைத்திருக்கும் ஒருவன், அந்த தொடர்புக்காக அவன் சொன்ன பொய் ஏற்படுத்தும் தாக்கம் தான் “மலேஷியா டு அம்னீஷியா”.
கதை:
சென்னை பீச்சில் ஒருவன் பித்துபிடித்தவன் போல் இருக்கின்றான். அவனை பார்த்த அவன் நண்பன் பிரபு (கருணாகரன்) டேய் அருண் என்னடா? மலேசியா போகலையா? என்னாடா இங்க இருக்க? என்று கேட்கின்றான். ஆனால் அவன் தன்னையே மறந்த நிலையில் இருக்கின்றான். மலேசியா சென்றவன் எப்படி சென்னை பீச்சில் இருக்கின்றான் என்ற குழப்பத்தில் அவன் குடும்பத்தினர். சரி யார் இந்த அருண்? சில நாட்களுக்கும் முன் நடந்த சம்பவங்களை பார்த்தால் என்ன நடந்தது என்று தெளிவாக தெரியும்.
பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அருண் (வைபவ்) மற்றும் சுஜாதா (வாணி போஜன்).. அருண் ஒரு கார்மெண்ட் நிறுவணத்தின் உரிமையாளர், சுஜாதா ஒரளவிற்குத்தான் படித்தவர். அவரை அருக்காணி என்றும் செல்லமாக அருண் கூப்பிடுவான். இவர்களின் ஒரே குழந்தை நிவி (பேபி வேதிகா). சுஜாதாவின் தாய்மாமா மன்னார்குடி நாராயணன் (M.S. பாஸ்கர்) தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள அருண் வீட்டில் வந்து தங்குகின்றார். அவருக்கும் துப்பறியும் மூளை, எதையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் குணம் போன்றவை இருக்கின்றது. அருணுக்கு சுஜாதாவை தவிர பெங்களூரில் இருக்கும் பெண் பாவணா (ரியா சுமன்) மீது ஒரு ஈர்ப்பு (கள்ளத்தொடர்பு) இருக்கின்றது.
ஒரு நாள் பாவணா வீட்டில் யாரும் இல்லை அதனால் அருணை பெங்களூருவில் இருக்கும் தன் வீட்டிற்கு வரச்சொல்கின்றாள். மனைவி சுஜாதா மற்றும் வீட்டிலிருக்கு மன்னார்குடி நாராயணனிடமும் வியாபார விஷயமாக மலேஷியா செல்வதாக பொய் சொல்லிவிட்டு பெங்களூரு செல்கின்றான். பாவணாவுடன் ஜாலியாக இருக்கின்றான். அடுத்த நாள் காலையில் ஒரு அதிர்ச்சி செய்து அருண் தலையில் இடியாய் இறங்குகின்றது. மலேஷியா சென்ற விமாணம் வானில் மாயமனதாக செய்திகளில் வருகின்றது.
மலேஷியா செல்கின்றேன் என்று பெங்களூரு வந்த அருண் அடுத்து என்ன செய்வது எப்படி சென்னைக்கு திரும்பி செல்வது என்று குழம்புகின்றான். தன் நண்பன் பிரபுவிடம் சென்று தன் நிலையை சொல்லி காப்பாற்ற சொல்கின்றான். அவன் அறிவுரைப்படி எல்லாவற்றையும் மறந்தவனாக நடிக்கின்றான்.
அருணை பரிசோதித்த டாக்டர் டெஸ்டிங்க் ரிசல்ட் அடிப்படையில் எதுவும் பிரச்சனையில்லை. ஏதோ அதிர்ச்சியில் தான் இப்படி ஞாபக மறதி வந்துள்ளது. ஒருவாரத்தில் அதுவாக சரியாகிவிடும் என்று சொல்கின்றார். ஆனால் சுஜாதாவின் மாமா மன்னார்குடி நாராயணனுக்கு மலேஷியா சென்ற அருண் சென்னை பீச்சிற்கு எப்படி வந்தார் என்று கண்டுப்பிடிக்க துடிக்கின்றார்.
மன்னார்குடி நாராயணன் இதை கண்டுபிடித்தாரா? தன் பொய்யை அருண் எப்படி சமாளித்தார்? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கின்றனர்.
பாராட்டுக்குறியவை:
இயக்குனர் ராதா மோகன் கதை என்றால் அதில் ஒரு அழகு இருக்கும். பெரிய அளவு அபத்தம் இருக்காது. அந்த அடிப்படையில் குடும்பத்துடன் பார்க்கும் அடிப்படையில் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
அம்னீஷியா நோயாளியாக தன் தவறை மறைக்க அருண் (வைபவ்) மற்றும் பிரபு (கருணாகரன்) செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி உள்ளது.
சுஜாதாவாக நடித்திருக்கும் வாணி போஜன் சராசரி மனைவி குணாதியசத்தை அழகாக பிரதிபலித்திருக்கின்றான். தன் கணவனின் குறைகளை கண்டு வெதும்பு காட்சிகளில் முகப்பாவதில் அவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகவும் பாராட்டுக்குறியவர் என்றால் மன்னார்குடி நாராயணனாக நடித்திருக்கும் M.S.பாஸ்கர். இவரின் மொக்கை காமெடி நகைச்சுவை, டிக்டாக் வீடியோ அலப்பரை, துப்பறிகின்ற அடிப்படையிலான நகைச்சுவை ரசிக்கும் படி உள்ளது.
குறைந்த அளவு கதாப்பாத்திரங்களை வைத்துகொண்டு நிறைவான திரைப்படத்தை கொடுக்கும் வல்லமை படைத்தவர் என்பதை இயக்குனர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
நெருடலானவை:
திரைப்படத்தை ஒரளவிற்கு நகைச்சுவை ததும்ப கொடுத்திருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கதையின் அடிப்படையில் நகைச்சுவை ஏராளமாக கொடுக்க வாய்ப்பிருந்தும். அங்கங்கே சில தொய்வுகள் ஏற்படுகின்றது. குறிப்பாக நடிகை சச்சுவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். அதேபோல் நடிகர் மயில்சாமி கதாப்பாத்திரத்தையும் இன்னும் கொஞ்சம் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். இதை குறை என்று சொல்லமுடியாது. ஆனால் பரிந்துரையாக எடுத்துகொள்ளலாம்.
ரியா சுமன் கதாப்பத்திரத்தை ஏதோ கதையோட்டத்திற்காக ஊறுகாய் போல் பயன்படுத்திருப்பது ராதாமோகன் என்ற மிகச்சிறந்த படைப்பாளியிடம் எதிர்பார்க்காத ஒன்று. கொஞ்சம் அந்த கதாப்பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம்.
தொகுப்பு:
“மலேஷியா டு அம்னீஷியா” திரைப்படம் விரசமில்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் நகைச்சுவை குடும்ப நாடகம்.
Zee5 ஓடிடி தளத்தில் இதை நேரடியாக காணலாம்
